அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டுள்ள 113 வகையான விலங்கினங்கள் அழிவின் விழிம்பில் இருப்பதாக விலங்குகள் நல ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இவற்றைக் காப்பாற்ற உடனடி உடனடி உதவிகள் தேவை. இல்லையேல் அவை முற்றிலுமாக அழிந்துவிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியா - நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்லாந்து மாகாணங்களில் கடந்த செப்ரெம்பர் மாதம் முதல் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.
இந்த காட்டுத்தீயில் சிக்கி கோலா கரடிகள், கங்காருகள், பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன என சுமார் 100 கோடி வன உயிரினங்கள் கருகி அழிந்திருக்கலாம் என விலங்கியல் ஆய்வாளர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட 113 விலங்கினங்களுக்கு உடனடி உதவி தேவை என்றும், அப்படி உதவி கிடைக்காவிட்டால் அந்த விலங்கினங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் வந்த பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட பின்னர் விலங்கியல் ஆய்வாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீயில் சிக்கி தீக்காயங்களுடன் உயிர் தப்பியுள்ள சில விலங்குகள், தங்களின் இருப்பிடத்தை முற்றிலுமாக இழந்துள்ளன.
மருத்துவம் மற்றும் பாதுகாப்பான இருப்பிட வசதி உடனடியாக கிடைக்காவிட்டால் 113 விலங்கினங்கள் முற்றிலும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது.
காட்டுத்தீ ஏற்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று உடனடி கள ஆய்வுகளை மேற்கொள்ள முடியவில்லை. அங்கும் ஆய்வு செய்தால் மட்டுமே, முழுமையான தகவல்கள் தெரியவரும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.